Powered By Blogger

சனி, 8 ஜூன், 2013

காரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்

    இரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையை தனி கார் சீட்டில் வைத்து தான் கூட்டிவர வேண்டுமாம். அந்த கார் சீட் பின் புறம் பார்த்தது போல இருக்கும். அதுவும் எப்படி- அக்குழந்தைக்கும் சீட் பெல்ட் அணிவித்திருக்க வேண்டும். இப்படி பிறந்த கைக்குழந்தைக்கே சீட் பெல்ட் போட வேண்டும் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

   இனியாவது கார்களில் பயணம் செய்பவர்கள் (கார் சீட் பெல்ட் இருக்கும் வண்டிகளிலாவது) சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வார்களா?

வியாழன், 6 ஜூன், 2013

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு ஸ்டாப் லைன்



ஸ்டாப் லைன் எனும் நிறுத்தக் கோடு பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். அது பற்றி காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிய வில்லை. அதன் முக்கியத்துவம் காவல் துறையினருக்கே அதிகம் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

இப்பொழுது விடுமுறையில் அமெரிக்கா வந்துள்ளேன். இங்கு நிறுத்துக் கோட்டிற்கு முன் (முன்தான் அதைத் தாண்டியல்ல) எல்லா வாகனங்களும் கண்டிப்பாக நின்று செல்கின்றன. யாருமே கண்காணிக்காத இடமாக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் யாரும் இந்த விதியை மீறுவதில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்களின் (இந்தியர்களையும் சேர்த்தே) கட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும் இதை மீறுபவர்களுக்கு விதிக்கப் படும் அபராதம் மிக மிக அதிகம் என்பதும் இன்னொரு காரணம். நிறுத்தக் கோட்டிற்கு முன் நிற்காத வாகன ஓட்டிகளுக்கு 214 டாலர் (11,812ரூ) சிகப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டுபவர்களுக்கு 436 டாலர் (24,067 ரூ) அபராதமாக விதிக்கப் படுகிறது.. இது தவிர அவர்கள் ஓட்டி வந்த வாகனத்திற்கான இன்ஸூரன்ஸ் கட்டணமும் அதிகமாகி விடும். எனவே வாகன ஓட்டிகள் இவ்விதிகளை கட்டாயமாக பின்பற்றுகிறார்கள்.

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அல்லது விபத்தின் விளைவுகளைக் குறைப் பதற்கு இந்த நிறுத்தக்கோட்டில் நின்று செல்லும் பழக்கத்தை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தலாமே! தமிழகக் காவல்துறையினர் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?