Powered By Blogger

திங்கள், 30 ஜனவரி, 2012

தேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை


பொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது   மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானது. காரணம் நம் முன்னே செல்லும் வாகனம் வலது பக்கமாகவே செல்லுமா? அல்லது இடது பக்கமாகவே செல்லுமா? அதன் ஓட்டுனர் வலது பக்கம் முந்துவதற்கு  அனுமதிப்பாரா? இடது பக்கம் முந்த அனுமதிப்பாரா? இவை எல்லாமே பின் வரும் வாகன ஓட்டிகளுக்கு புரியாதபுதிர்தான்!.

மற்ற நாடுகளில் எல்லா வாகனங்களும் (குறிப்பாக மெதுவாகச் செல்லும் வாகனங்கள்) இடதுபுற ஓரமாகச் செல்லும். அவற்றை முந்தும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகன ஓட்டியிடம் முந்த அனுமதி கேட்க வேண்டும். அவர் அனுமதித்த பிறகு வலது புற இண்டிகேட்டர் போட்டு, வலது பக்க பாதைக்குச் சென்று அந்த வாகனத்தை முந்த வேண்டும், முந்திய பிறகு இடது பக்க இண்டிகேட்டர் போட்டு, இடது பக்க பாதைக்குச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.

ஒவ்வொரு முறை முந்தும் போதும் இந்த முறைப்படிதான் முந்த வேண்டும். இது போல சரியான முறையில் முந்தினால் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு முறை முந்தும் போதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த விதியை மீறுபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சனி, 14 ஜனவரி, 2012

சாலை விதிகளை மதித்து நடப்போம்





சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
எப்போதும் கவனம் சிதறாமல் ஓட்ட வேண்டும்
அகலமான சாலையில் மட்டுமே முந்த வேண்டும்
மற்ற வாகன ஓட்டிகளை மதித்து நடக்க  வேண்டும்
மழை பனி நேரங்களில் வேகத்தைக் குறைக்க வேண்டும்
வேகத்தடையுள்ள இடத்தில் வேகத்தைக் குறைக்க வேண்டும்.
எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுத்து ஓட்ட வேண்டும்
வாகனத்தை முந்தும் போது வலது  பக்கமாகவே முந்த வேண்டும்
நிறுத்துக் கோட்டிற்கு (stop Line) முன் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
 

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
அவை நாயகன்
வியபதி

சனி, 7 ஜனவரி, 2012

ஒய் திஸ் கொலை வெறி



சாலை பாதுகாப்பு வாரம் 7 ஆம் நாள்
ஒய் திஸ் கொலை வெறி
யாரும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லைதான். ஆனால் செய்யக்கூடாதவற்றைச் செய்வதால்தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ‘செயத்தக்க அல்ல செயக்கெடும்.. என்ற வள்ளுவரின் குறளை நினைவில் வைத்து கீழே உள்ளவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் விபத்துக்கள் குறையும் இதில் சந்தேகமே இல்லை.
ஒரு போதும் வேகமாக ஒட்ட வேண்டாம்.
போதிய இடைவெளி இல்லாமல் ஒட்ட வேண்டாம்
குடித்துவிட்டு வாகனத்தை ஒட்ட வேண்டாம்
மழை, பனி நேரத்தில் வேகமாக ஒட்ட வேண்டாம்
வளைவுகளில் எப்போதும் முந்த வேண்டாம்
நிறுத்துக் கோட்டில் நிறுத்தாமல் ஒட்ட வேண்டாம்
சாலை விதிகளை மதிக்காமல் ஒட்ட வேண்டாம்
வேகத் தடைகளில் வேகத்தைக் குறைக்காமல் ஒட்ட வேண்டாம்
சாலையிலுள்ள அறிவிப்புகளை மீறி ஒட்ட வேண்டாம்
திரும்பும் முன் சைகை காண்பிக்காமல் திரும்ப வேண்டாம்
சிகப்பு விளக்கில் நிறுத்தாமல் போக வேண்டாம்

இவற்றைத் தெரிந்து கொண்டும் இவற்றை மீறி ஓட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு தங்கள் உயிர் மீதும் பயம் இல்லை மற்றவர்கள் உயிர் பற்றியும் கவலையில்லை என்றுதானே அர்த்தம்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்


சாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள்
விபத்து ஏற்படுவதற்கு  முக்கிய காரணங்கள்

விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சாலை விதிகளை மதிக்காதது, பின்பற்றாதது.
2. வாகனத்தை ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது.
3. அதிக வேகமாக ஓட்டுவது. (சரியான வேகத்தில் ஓட்டாதது)
இதைப் படித்தால் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுனர்கள்தான் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். மற்ற காரணங்கள் பல இருந்தாலும் அவை மிகக்குறைவான விபத்துக்களையே ஏற்படுத்துகின்றன.

வியாழன், 5 ஜனவரி, 2012

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்





சாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள்
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை என்று எழுதியிருந்தேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது – வலைப் பதிவர்கள் அனைவரும் ஒரே நாளில் இந்த சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும் என்பதே அந்த யோசனை.
எனவே சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

(தயவு செய்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்)

புதன், 4 ஜனவரி, 2012

பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் உதவ முன்வருவார்களா?


சாலை பாதுகாப்பு வாரம்  நான்காம் நாள்
பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் உதவ முன்வருவார்களா?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தை      சாலை பாதுகாப்பு வாரம்’’ என அறிவித்து மாநில அரசுகளுடன் இணைந்து போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் கழகங்கள், காவல் துறை மூலமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொது மக்களிடம் இந்த நற்பணி பற்றிய விவரம் சரியாக சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்குக் காரணம் பத்திரிகைகளும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாதது தான். ஒரு மோசமான விபத்து நடந்து விட்டால் அதைப்பற்றிய விவரங்களை புகைப்படங்களுடன் வெளியிட ஆர்வம் காட்டும் பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

திருப்பங்களில், குறுகிய சாலைகளில், பாலங்களில் முந்தாதீர்கள்,
பேருந்து படிகளில் பயணம் செய்யாதீர்கள், (படியில் பயணம் நொடியில் மரணம்)
ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், இறங்காதீர்கள்
குடித்துவிட்டு ஓட்டாதீர்கள்,
வாகனம் ஓட்டும் போது செல் ஃபோன் மணி அடித்தால் எடுக்காதீர்களை அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
எப்போதும் கவனமாக ஓட்டுங்கள்.
அதிவேகம் ஆபத்தில் முடியும்.  போன்ற விழிப்புணர்வு வாசகங்களை பத்திரிகைகள் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடலாம், தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு இடையிலும் இடம் பெறச்செய்யலாம். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்களைக்கூட ஒளிபரப்பலாம்.

எல்லோரும் சேர்ந்து வடம் பிடித்தால்தான் தேர் நிலைக்குப் போய்ச் சேரும் இணைந்து செயல்பட முன்வருவார்களா?

செவ்வாய், 3 ஜனவரி, 2012

சாலை விதிளை மதித்து நடப்போம் விபத்தை தவிர்ப்போம்


சிக்னல் விளக்கு இருக்கக்கூடிய சாலை சந்திப்போ அல்லது சிக்னல் இல்லாத சாலை சந்திப்போ எதுவாக இருந்தாலும் ஸ்டாப் லைன்கள் போடப்பட்டிருக்கும். வாகனங்களை நிறுத்தும் போது அந்த ஸ்டாப் லைன்கள் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட  வேண்டும். ஆனால் நம் ஊர்களில் ஓட்டுனர்கள் அப்படி நிறுத்தாமல் ஸ்டாப் லைன்களைத் தாண்டிப் போய் நிறுத்துகிறார்கள். இப்படிச் செய்வது ஏதோ ஒரு சிலரல்ல பலர் இத்தவறைச் செய்கிறார்கள்.  அங்கிருக்கும் காவல் துறையினரோ இது பற்றி கண்டிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை. அதனால் ஓட்டுனர்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் போய் எல்லா இடங்களிலும் தொடர்ந்து இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இதுபோன்ற ஸ்டாப் லைன்கள் இருக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் நிச்சயமாக நிறுத்தியே செல்கிறார்கள். ஊரின் எந்தப்பகுதியில் ஸ்டாப் லைன்கள் இருந்தாலும் காவல்துறையினர் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எந்த நேரமாக இருந்தாலும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை ஸ்டாப் லைனுக்கு முன்பாக நிறுத்தி இருபுறமும் பார்த்து பிறகே அதைக்கடந்து செல்கிறார்கள். பாதசாரிகள் யாராவது வருவதைப் பார்த்தால் அவர்கள் சாலையைக் கடந்து செல்ல அனுமதித்து அவர்கள் கடந்து சென்ற பிறகே அங்கிருந்து நகர்கிறார்கள்.

காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து  இங்கும் ஓட்டுனர்கள் சரியாக ஸ்டாப் லைனில் நிறுத்திச் செல்ல வலியுறுத்த வேண்டும்: அப்படி நிறுத்தாத வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரயில்வே லெவல் கிராசிங்கில் கதவு மூடப்படும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பொறுமையாக காத்திருப்பது இல்லை. கதவுக்கடியில் குனிந்து (அதைக்கடந்து) தங்கள் வாகனங்களை ஓட்டிச்செல்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் இவற்றை தவிர்ப்பது விபத்துக்களைப் பெரிதும் குறைக்கும்.

கவனமாக ஓட்டுவோம் விபத்துக்களக் குறைப்போம்

திங்கள், 2 ஜனவரி, 2012

ஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்

 



சாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சதவீதமாக உள்ளன. இதில் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுனர்கள் செய்யும் தவறுகள் 40 சதவீத அளவிற்கும், மற்ற வாகன்ங்களின் ஓட்டுனர்கள் செய்யும் தவறுகள் 40 சதவீத அளவிற்கும்,விபத்துக்களுக்குக் காரணமாகி விடுகின்றன.

வாகன ஓட்டிகளின் தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம். முன்னே செல்லும் வாகனத்தை இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக பின் தொடர்வது ஒரு காரணம். சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டுவது.  முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது முறைப்படி ஓட்டாதது (தவறான ஓவர் டேகிங்)

எதிரே வரும் வாகனங்களுக்கு போதிய இடம்  தராமல் ஓட்டுவது. வாகனம் ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது. தூக்க கலக்கத்தில் அல்லது போதையில் வாகனத்தை ஓட்டுவது. வேகத்தடை இருக்கும் இட்த்தில் கூட வேகத்தைக் குறைக்காமல் ஓட்டுவது. 

முந்தக் கூடாத இடங்களில் குறிப்பாக வளைவுகளில் முந்துவது. இண்டிகேட்டர் விளக்குகள் சரியாகப் பயன்படுத்தாதது அல்லது சரியான சைகை காட்டாமல் வாகனம் ஓட்டுவது. இவற்றை  கவனத்தில் கொண்டு வாகனம் ஓட்டினால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்பது உறுதி

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சாலை பாதுகாப்பு வாரம்



சாலை பாதுகாப்பு வாரம்
அனைவருக்கும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை  (முதல் தேதி முதல் ஏழாம் தேதி வரை) “சாலை பாதுகாப்பு வாரமா”கக் கொண்டாடப் படுகிறது. அதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. எல்லா மாநில போக்குவரத்துக் கழகங்களும், போக்குவரத்துத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் இந்த சாலை பாதுகாப்பு” வாரத்தில் நடத்தி வருகின்றனர்.

ஏதோ ஒரு மிக மோசமான விபத்து நடந்துவிட்டால் அதைப்பற்றியே எல்லா பத்திரிகைகளும் அரசும் விபத்தைத் தவிற்பதற்கான பல வழிகளையும் எழுதியும் பேசியும் ஓரிரு நாட்களில் அதைப் பற்றி மறந்துவிடுவதும் வழக்கமாக இருக்கிறது.

சாலை பாதுகாப்பு வாரமா”க ஆண்டின் முதல் வாரத்தை கொண்டாடுவதோடு நின்று விடாமல் தொடர்ந்து ஆண்டு முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

இதை படிப்பவர்கள் அனைவரும் சாலை விபத்துக்களைக் குறைப் பதற்கான அவரவர்களுக்குத்  தெரிந்த ஆலோசனைகளை இங்கு பதிவு   செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.