Powered By Blogger

திங்கள், 28 பிப்ரவரி, 2011

விபத்துக்கான இன்னும் சிலகாரணங்கள்

விபத்துக்களை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள்
சாலையிலுள்ள குறைபாடுகள்கூட விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மேடான சாலையில் ஏறும்போதும், திருப்பத்தில் வாகனத்தைத் திருப்பும் போதும் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எதிரே வாகனம் வருவது தெரியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராமல் திடீரென  அவை எதிரெதிராக வருகின்ற நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை நல்ல நிலையில் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையிலும், அங்கங்கே தண்ணீர்தேங்கியுள்ள நிலையிலும் ஓட்டுனர்கள் பல்லம் குழியைத் தவிர்த்து நல்ல பகுதியில் ஓட்ட முற்படுவார்கள். இதே போல எதிரே வரும் வாகன ஓட்டியும் செயல்படும் போது வாகனங்கள் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
சாலை ஓரத்தில் ஜல்லியை கொட்டியும், தார் டின்களை சேகரித்து வைப்பதும் சாலை பழுதுபார்க்கம் எந்திரங்களை நிறுத்தி வைப்பதும் கூட விபத்துக்களை ஏற்படுத்தும். எனவே சாலை நல்ல நிலையில் பராமரிக்கப் படுவதும் விபத்துக்களைத் தவிர்க்க உதவும்.
சாலையில் சரியான அளவில், சரியான முறையில் அமைக்கப்படாத, வண்ணம் தீட்டப்படாத, முன் அறிவிப்பு வைக்கப்படாத வேகத்தடைகள் விபத்துக்குக் காரணம் ஆகின்றன. இவை குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன. எனவே வேகத்தடை களை சரியான அளவில் அமைப்பதுடன் அவை நன்கு தெரியும்படிமஞ்சள் வண்ணம் தீட்டி, அறிவிப்புப் பலகையும் வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாகப் பார்த்து ஓட்ட வசதியாக இருக்கும்: விபத்துக்களையும் தவிர்க்கலாம்.
டயர் பஞ்சர் ஆவது, திடீரென வாகனம் பழுதாவது, இயந்திர பாகங்கள் உடைந்து போவது போன்ற வாகனத்தில் ஏற்படும் குறைபாடுகள் விபத்துக்களுக்குக் காரணமாகின்றன, இதே போல எதிரே வரும் வாகனத்தில் ஏற்படும் இயந்திரக்கோளாறுகளும் நமது வாகனத்தின் விபத்துக்குக் காரணம் ஆகிவிடலாம். இவ்வித விபத்துக்களுக்கு ஓட்டுனர்கள் காரணமில்லை என்றாலும் கூட எதையும் எதிர் பார்த்து ஓட்டுவதும், அதிவேகமாக  ஓட்டாமல் இருப்பதும் இவ்விபத்துக்களின் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க உதவ முடியும். முன்னெச்சரிக்கை பராமரிப்பின் (preventive maintenance) மூலம் வாகனங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்- அதனால் இது போன்ற விபத்துக்களே ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளவும் முடியும்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விபத்திற்கான காரணங்கள்


விபத்துக்கான  காரணங்கள்
சாலை விபத்துக்களுக்கு கீழே உள்ள பல காரணங்கள் இருக்கின்றன.:
  1. வாகன ஓட்டிகளின் தவறுகள்
  2. சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளின் தவறுகள்
  3. ஓட்டுனருடன் இருக்கும் நடத்துனர், உதவியாளர் போன்றோர் செய்யும் தவறுகள்.
  4. வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் செய்யும் தவறுகள்.
  5. சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் தவறுகள்.
  6. வாகனத்தில் ஏற்படும்  கோளாறுகள்
  7. பிற வாகனங்களில் ஏற்படும்  கோளாறுகள்
  8. சாலைகளில் உள்ள குறைபாடுகள்.
  9. சாலையைப் பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள்.
  10. சாலையில் திரியும்  கால்நடைகள்.
  11. தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
  12. போதிய  வெளிச்சம் இல்லாமை
இந்தக் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். போதிய  வெளிச்சம் இல்லாமை எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பகல்  நேரத்தில் சாலையிலுள்ளவை அனைத்தும் தெளிவாகத் தெரிவதால் சுலபமாக வாகனங்களை ஓட்ட முடியும். ஆனால் இரவு நேரத்திலோ எங்கும் இருட்டாக இருப்பதால் வாகனத் தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலேயே ஓட்ட வேண்டும். எனவே போதிய வெளிச்சமின்மையால் மிகக்கவனமாகவே ஓட்டவேண்டும். விடியல் காலை நேரத்திலும், மாலை அந்தி  சாயும் நேரத்திலும் நாம் கவனமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு சென்றாலும் எதிரே வருபவர்  விளக்கை  எரியவிடாமல் வரக்கூடும்.. அதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உண்டு.

தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பனி பெய்யும் நேரத்தில் சாலை பனியால் முழுமையாக மறைக்கப்படும் ஆபத்து உண்டு.  விமான ஓடுதளம்  பனி நேரத்தில் சரியாகத்தெரியாததால் விமானங்கள் ரத்து செய்யப்படு வதை பார்க்கிறோம். பாதை தெரியாத அது போன்ற நேரங்களில் மிக  மிகக் கவனமாக ஓட்டுவது அவசியம்.

அடுத்து மழை விபத்துக்கு ஒரு பெரிய காரணமாக  அமைகிறது. மழை பெய்யும் நேரங்களில் என்ன தான் வைப்பர்கள் வேலை செய்தாலும்கூட ,பாதை முழுவதும் சரியாகத் தெரியாது. எதிரே வரும் வாகனங் களையோ பாதசாரிகளையோ சரியாகப்பார்க்க முடியாது அதுவும் கனமழையாக இருந்தால் நிலைமை இன்னும்  மோசமாக இருக்கும். எனவே மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பான வேகத்தில் கவனமாக ஓட்டவேண்டியது அவசியம்.. மழை நேரங்களில் ஏன் வேகமாகப் போகவில்லை என கேட்கமாட்டார்கள். மாறாக இவ்வளவு மழையிலும் நம்மை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தாரே என்றுதான் சொல்வார்கள். எனவே குறைவான வேகத்தில் கவனமாக ஓட்டுவதே சிறந்தது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

விபத்தைத் தவிர்ப்போம்-

விபத்தை ஏற்டுத்து பவர்களுக்கும், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பல விதத்தில் கஷ்டங்ளும் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்து ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம்.

விபத்துக்கள் ஏறபடாமல் தடுக்க விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சாலை விதிகளை மதிக்காதது, பின்பற்றாதது.
2. வாகனத்தை ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது.
3. அதிக வேகமாக ஓட்டுவது. (சரியான வேகத்தில் ஓட்டாதது)
இதைப் படித்தால் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுனர்கள்தான் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். மற்ற காரணங்கள் பல இருந்தாலும் அவை மிகக்குறைவான விபத்துக்களையே ஏற்படுத்துகின்றன.
எல்லா காரணங்களைப் பற்றியும் விரிவாக பின்னர் பார்ப்போம்.